நாட்டில் இதுவரையான 7 மாதகாலப்பகுதியில் 78,125 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை (21) மாத்திரம் புதிதாக 1,097 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, தற்போது நாடு முழுவதிலும் உள்ள 162 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் அதிவேக ஆபத்து வலையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் இதுவரை டெங்கு நோய் காரணமாக 56 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், நோயாளர்களின் இறப்பு விகிதம் 0.07 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மாகாண மட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில் 52.78 சதவீதமாகும் (41,236 நோயாளர்கள்).
மாவட்ட மட்டத்தில் கம்பஹா மாவட்டமே மிக அதிகளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. அங்கு 16,478 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 15,540 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதற்கு மேலதிகமாக மாத்தறை மாவட்டத்தில் 5,454 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 5,228 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 5,135 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
பொதுமக்கள் தங்களது சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
