இலங்கையில் செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் (VTOL) விமானங்களை உற்பத்தி செய்யும் வசதியை நிறுவுவதற்கான முன்மொழிவை இலங்கை ஸ்டார்ட் அப் நிறுவனமான Seahorse Air Ceylon முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் அந்நிறுவன பிரதிநிதிகள், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கெப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை சந்தித்து, மேம்பட்ட வான்வழி இயக்கத் துறை (Advanced Air Mobility – AAM) தொடர்பான விமான உற்பத்தி திறன்களை மேம்படுத்தும் திட்டங்களை விளக்கியுள்ளனர்.
Seahorse Air Ceylon நிறுவனம் ஏற்கனவே இலங்கை முதலீட்டு சபையில் (BOI) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், திட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் பின்பற்ற வேண்டிய விமானப் பாதுகாப்பு விதிமுறைகள், சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் சர்வதேச விமானத் தரநிலைகள் தொடர்பில் CAASL அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் போது விமானப் பாதுகாப்பு, பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை கண்காணிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவது முக்கியம் என கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் திட்டம் இலங்கையின் விமானப் போக்குவரத்து துறையின் வளர்ச்சிக்கும், வளர்ந்து வரும் மேம்பட்ட வான்வழி இயக்கத் துறையில் நாட்டின் பங்களிப்புக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் என CAASL தெரிவித்துள்ளது.
VTOL விமானங்கள் ஓடுபாதைகள் இன்றி செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், குறுகிய தூரப் பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக உலகளவில் ஆராயப்பட்டு வருகின்றன.
