காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்பயணங்களைத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடற்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (3) மாலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், கடல் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடற்பரப்புகளில் பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடிச் சமூகத்தினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
