இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய சிறுவர் உரிமைகள் சட்டம் (Child Rights Act) தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும், தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் பாதுகாப்புகளுடன் இணைத்து உறுதிப்படுத்தும் வகையில் இந்த புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
முன்னதாக 2024 பெப்ரவரி மாதத்தில் “Rights of Child Compact Act” என்ற பெயரில் சட்டமூலம் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை “Child Rights Act” (சிறுவர் உரிமைகள் சட்டம்) என பெயர் மாற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய மேலதிக விடயங்களை உள்ளடக்கிய வகையில் திருத்தப்பட்ட கருத்துரு (Concept Paper) தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் சட்ட வரைவுத் திணைக்களம் ஏற்கனவே சட்டமூலத்தை தயாரிக்கும் பணியை ஆரம்பித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் சட்டமூலத்தை விரைவாக இறுதிப்படுத்த சட்ட வரைவுத் திணைக்களத்திற்கு அனுமதி வழங்கும் யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த யோசனையை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
