பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்தி, பொதுப் பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு இடையூறு ஏற்படுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியிலேயே நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்து தரிப்பிடங்கள் தடையின்றி இருப்பது அவசியம் எனவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, பேருந்து தரிப்பிடத்துக்கு முன்புறம் 30 மீற்றர் மற்றும் பின்புறம் 15 மீற்றர் வரையிலான பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளுக்கென தனியான நிறுத்துமிடங்கள் உள்ள இடங்களில், முன்புறம் 15 மீற்றர் மற்றும் பின்புறம் 10 மீற்றர் பகுதியில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பிடங்களைத் தடையின்றி வைத்திருப்பதுடன், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனங்களை உரிய இடங்களில் நிறுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
