தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதையோ முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
பரீட்சைப் பெறுபேறுகளை காரணம் காட்டி பிள்ளைகளுக்கு எவ்விதமான உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது மன உளைச்சல்களையோ வழங்குவதை பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்.
அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு அசௌகரியத்தை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் உடனடியாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகத்தின் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் பிரகாரம் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
