ஆசிரியர் சேவையை இந்த நாட்டின் அதிக வருமானம் பெறும் முதல் 10 தொழில்களுக்குள் உள்வாங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய, ஆசிரியர் சேவையில் உள்ள வேதனப் பிரச்சினைகளைத் தீர்க்க படிப்படியாக வேதன உயர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் தாமதமடைந்திருந்த ஆசிரியர் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான போட்டிப் பரீட்சைகள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கல்வி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் தரம் 9 இல் தேசிய மட்டத்திலான பரீட்சையொன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மாணவர்கள் தமது விருப்பத்திற்கேற்ப கல்வி அல்லது தொழிற்கல்வித் துறையைத் தெரிவு செய்ய முடியும் , இதற்காக 50 தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும் எனவும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
