திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரை பகுதியில் கடல் சுமார் 80 அடி தூரம் வரை உள்வாங்கியுள்ளதால், அங்கு அரிய இயற்கைக் காட்சி ஒன்று உருவாகியுள்ளது.
கடல் உள்வாங்கியதன் காரணமாக, வழக்கமாக நீரில் மூழ்கியிருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளிப்படையாகத் தென்பட்டு வருகின்றன.
இந்த காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்குத் திரண்டு வருகின்றனர். பலர் அந்த பாறைகள் மீது நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பிகள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கடல் தற்காலிகமாக உள்வாங்கிய இந்த நிகழ்வு இயற்கையான அலைச்சல்களின் மாற்றம் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஆபத்தான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
