2026 வெசாக் விழா ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, வெசாக் மத வழிபாட்டின் போது பொருத்தமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து , புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிக்கையில்,
வெசாக் கொண்டாட்டங்களின் போது “இசை நிகழ்வுகள்” மற்றும் “பயமுறுத்தும் வீடுகள்'” போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றும் தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள் பௌத்த கொடிகளுக்குப் பதிலாக மஞ்சள் நிறக் கொடிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைகளின் மகாசங்கத்தினர் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிவித்த அமைச்சர், தானசாலைகள், வெசாக் அலங்காரங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
