இலங்கை சிறைச்சாலையில் உள்ள இந்திய பாம்பன் விசைப்படகு மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் இன்று (22) பாம்பன் பாலத்துக்கு முன் வீதியில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று, கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகை கடற்படையினர் கைப்பற்றியதோடு, அதில் இருந்த 12 மீனவர்களை கைது செய்து நீர்கொழும்பு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 12 பேரும் தொடர்ந்து ஏழாவது முறையாக நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, 90 நாட்களுக்கு மேலாக விசாரணைக் கைதிகளாக உள்ளனர்.
மீனவர்களின் வழக்கை துரிதமாக நடத்தி விரைந்து மீனவர்களையும் படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை சிறைச்சாலையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் பாம்பன் பாலத்திற்கு முன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
