தையிட்டி விகாரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்த குற்றச்சாட்டில் கைதான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர்களையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஞாயிற்று கிழமைகளில் பலாலி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திடுமாறும் நிபந்தனை விதித்துள்ளது.
வெசாக் தினத்தை முன்னிட்டு, தையிட்டி விகாரையில் நேற்றையதினம் (30) சனிக்கிழமை விசேட வழிபாடுகள் இடம்பெற்ற நிலையில், விகாரைக்கு சற்று தொலைவில், காணி உரிமையாளர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள், விகாரைக்கு செல்வதாக கூறி விகாரைக்குச் சென்று, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸார் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்தவேளை, இருவரும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை வழங்கியதை அடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைக்குப் பின்னர் இருவரையும் மல்லாகம் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது அவர்களை ஒரு இலட்சம் ரூபா பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதோடு, ஞாயிற்று கிழமைகளில் பலாலி காவல்நிலையத்தில் கையெழுத்திடுமாறு நிபந்தனை விதித்தது.
