குடும்பச் சுமை காரணமாக ஓமான் நாட்டிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற வவுனியா, ஓமந்தை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் ஓமானில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா ஓமந்தை பகுதியைச் சேர்ந்த சிந்துஜா (இரண்டு பிள்ளைகளின் தாய்) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் இருந்தபடியே சிந்துஜா தனது கணவரோடு தொடர்ந்து தொலைபேசியில் சந்தோசமாகவே உரையாடி வந்துள்ளார். எனினும், கடந்த மாதம் 19ஆம் திகதிக்கு பின்னர் அவரிடமிருந்து குடும்பத்தினருக்கு எந்தவிதமான தொலைபேசி அழைப்புக்களும் வரவில்லை. இதனால் பதற்றமடைந்த கணவர், சிந்துஜாவின் தொலைபேசிக்கு பலமுறை அழைப்பினை ஏற்படுத்திய போதிலும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தொடர்புகள் துண்டிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து, சிந்துஜா மரணமடைந்துவிட்டதாக அதிர்ச்சிச் செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. அவர் தவறான முடிவு எடுத்து இறந்துள்ளதாக வவுனியா ஓமந்தையில் உள்ள அவரது குடும்பத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவரது மரணத்திற்கான பின்னணி மற்றும் உண்மையான காரணம் குறித்து இதுவரை தெளிவான விபரங்கள் வெளியாகவில்லை.
சிந்துஜா உயிரிழந்ததாகக் கூறப்பட்டு தற்போது இரண்டு கிழமைகள் கடந்துள்ள நிலையிலும், அவரது சடலத்தை இலங்கைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் இன்னும் தாமதமடைந்துள்ளதாக அவரின் கணவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
வறுமை காரணமாக வெளிநாடு சென்ற தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், தங்களது தாயின் முகத்தை இறுதியாக ஒருமுறையாவது பார்ப்பதற்கு இரண்டு பிள்ளைகளும், சடலத்தை விரைவாக நாட்டிற்கு கொண்டுவரக் கோரி அவரது கணவரும் அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
