மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை தயாரித்து அவற்றை உண்மையான தங்கமாக வங்கியில் அடைவு வைத்து பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு 9 மாதங்களாக தலைமறைவாக இருந்த 45 வயதுடைய ஒருவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுணதீவு பகுதியைச் சேர்ந்த இவர், தனது மனைவியுடன் இணைந்து போலி ஆபரணங்களை வங்கியில் அடைவு வைத்து பணம் பெற்றதாகவும், பின்னர் அவை போலியானவை என தெரியவந்ததை அடுத்து மனைவி கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலைமறைவாக இருந்த சந்தேகநபர் மதுபான கடையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஆபரணங்களை தயாரிக்கும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகள் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
