ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகில் உள்ள மண்சரிவு அபாயப் பகுதிக்கு மேலாக உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய சேதங்களைக் கருத்திற்கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ள மலை உச்சியில் உள்ள சில யூக்கலிப்டஸ் மரங்களின் வேர்கள் தற்போது வெளியில் தெரிவதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியில் தற்போது நிலவும் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, இந்த மரங்கள் எந்த நேரத்திலும் பிரதான வீதியில் முறிந்து விழக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
அவ்வாறு மரங்கள் முறிந்து விழுந்தால், வீதியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபாயகரமான முறையில் காணப்படும் இந்த மரங்களை அகற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
