இலங்கை பொருளாதாரம் தற்போது படிப்படியாக மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை எட்டியுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் தற்போதைய சூழலில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், நீண்டகால பொருளாதார நிலையானத் தன்மைக்கு இவை மட்டும் போதுமானதல்ல என்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க வலுவான ஏற்றுமதித் துறை அவசியமாகியுள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற தேசிய ஏற்றுமதி அபிவிருத்தி திட்டம் 2026 – 2030 உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையை இறக்குமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்திலிருந்து ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றியமைப்பதற்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது நாட்டின் பொருளாதார மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், இலங்கை தற்போது படிப்படியான மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய மாற்றத்தை எட்டியுள்ளது.
சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் தற்போதைய சூழலில் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், நீண்டகால பொருளாதார நிலையானத் தன்மைக்கு இவை மட்டும் போதுமானதல்ல என்பதால், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் நெருக்கடிகளிலிருந்து பொருளாதாரத்தைப் பாதுகாக்க வலுவான ஏற்றுமதித் துறை அவசியமாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் ஆண்டு ஏற்றுமதி வருமானம் சராசரியாக 12 பில்லியன் டொலர்களாகவே இருந்துள்ளதுடன், குறிப்பாக ஆடை மற்றும் தேயிலை ஆகிய இரு பாரம்பரிய தயாரிப்புகள் மட்டுமே மொத்த ஏற்றுமதியில் பாதியளவைக் கொண்டுள்ளன.
மேலும், இலங்கையின் ஏற்றுமதி சந்தையில் சுமார் 40 சதவீதம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை மட்டுமே சார்ந்துள்ளதால், சந்தைப் பன்முகத்தன்மை இல்லாதது ஒரு பலவீனமாகப் பார்க்கப்படும் நிலையில், இந்த புதிய தேசிய திட்டம் தயாரிப்புகளைப் பன்முகப்படுத்துதல் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியுடன் இலங்கையை ஆழமாக இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம் சாதாரண தயாரிப்புகளுக்கு அப்பால், உயர் மதிப்புள்ள உற்பத்திப் பொருட்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த முன்னுரிமை அளிப்பதுடன், பாரம்பரிய சந்தைகளைத் தாண்டி புதிய பிராந்திய சந்தைகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தேடி, வர்த்தக வசதிகள், நிதி அணுகல், தரமான உட்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் நிலவும் தடைகளை நீக்க வழிவகுக்கிறது.
இதேவேளை, பொருளாதார நிலையை உறுதிப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதித் துறைக்கு ஆதரவான சூழலை மத்திய வங்கி உருவாக்கி வருகிறது. நெகிழ்வான மாற்று விகித முறை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் எதிர்கொள்ளும் சவால்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிதி டிஜிட்டல் கொடுப்பனவு முறைகள் மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியாளர்களுக்கான நிதி அணுகல் எளிதாக்கப்படவுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தேசிய திட்டத்தின் வெற்றி என்பது கொள்கை வடிவமைப்பில் மட்டுமல்லாமல், அதன் முறையான நடைமுறையிலேயே தங்கியுள்ளதுடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் அனைத்து பங்குதாரர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே நிலையான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என்றார்.
