மட்டக்களப்பு, உறுகாமக் குளத்தில் மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதி கோரி, கித்துள் கிராமிய மீனவர் அமைப்பு, வரையறுக்கப்பட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து நேற்றைய தினம் (22) கித்துள் சந்தியில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
ஒரு குளத்திற்கு ஒரு துறைதான் அமைய வேண்டும் என்று எந்த சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பிய மீனவர்கள், வெவ்வேறு கிராமங்களில் வசிக்கும் தங்களுக்கு இரு துறைகள் அமைக்கப்படாமல் அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி பல்வேறு சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரைப் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, அவர் உடனடியாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் மற்றும் நன்நீர் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசியதுடன், இப்பிரச்சினைக்குச் சுமூகமான தீர்வு காண்பதற்காக எதிர்வரும் 30.06.2026 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரு தரப்பு மீனவர்களையும் உள்ளடக்கிய கூட்டுச் சந்திப்பொன்றை நடத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும், அதுவரையிலான இடைக்கால ஏற்பாடாக, கித்துள் மீனவர்கள் தங்களின் வழக்கமான வடிச்சல் துறையிலேயே தோணிகளை நிறுத்தித் தொடர்ந்து மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்குமாறு நன்நீர் மீன்பிடித் திணைக்களப் பொறுப்பதிகாரியிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அத்தோடு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான திரு. கஜேந்திரன், திரு.கா.நாகேந்திரன், மீனவர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
