காலி – தங்கெதர பகுதியில் கடந்த 12ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை (29) பகல் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகஹ சந்தியில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 03 கிராம் 810 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இக்கொலைச் சம்பவத்திற்கு ஆதாரமாகவும் உடந்தையாகவும் செயற்பட்ட குற்றச்சாட்டில் 23 ஆம் திகதி வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 12 ஆம் திகதி காலை 7:30 மணியளவில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர், தங்கேதர பகுதியில் வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
