மண்டைத்தீவு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று (10) யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.
குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். குருநகர் ஆலயப் பங்குத்தந்தையின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதையடுத்து, மெழுகுவர்த்தி மற்றும் தீபங்கள் ஏற்றப்பட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
1986ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி, குருநகர் பகுதியைச் சேர்ந்த 31 மீனவர்கள் கரைவலை மீன்பிடி நடவடிக்கைக்காக படகொன்றில் மண்டைத்தீவுக்குச் சென்றிருந்தனர்.
அந்த வேளையில் அங்கு நிலைகொண்டிருந்த கடற்படையினர், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வாளால் தாக்கியும் படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் 31 மீனவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பல உறவினர்களும் அடங்கியிருந்தனர்.
இந்த துயரச் சம்பவம் இடம்பெற்று 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
