‘டித்வா’ புயல் அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள குடியமர்த்துவதற்காக காணிகளை வழங்கும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அமைச்சரவை பேச்சளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்.
குறித்த அறிவிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் ‘டித்வா’ புயல் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு மற்றும் மண்சரிவினால் அதிக ஆபத்துக்களுக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதற்குத் தேவையான காணிகளை அரச காணிகளிலிலிருந்து மாத்திரம் வழங்க முடியாதிருப்பதால், கீழ்க்காணும் வகையில் படிமுறைகளை மேற்கொண்டு இப்பணிக்குத் தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைனக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன், தற்போது அளிக்கப்பட்டுள்ள பத்திரங்கள் மூலம் வேறு நபர்களுக்கு வழங்கியுள்ள காணிகளை மீள்குடியமர்த்துவதற்குப் பயன்படுத்துவதற்காக அடையாளங் காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில், காணியின் அபிவிருத்திப் பெறுமதியை பிரதேச செயலாளர் ஊடாக அளிப்புப்பத்திர உரிமையாளருக்கு செலுத்தி சமமான வருமானத்தைக் கொண்டுள்ள நபருக்கு குறித்த காணியை முறைசார்ந்த வகையில் ஒப்படைப்பதற்கு அனுமதியளித்தல்
மீள குடியமர்த்தும் பணிக்கு நன்கொடையாளர்களால் அரசுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள தனியார் காணிகள், அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ‘அன்பளிப்பு உறுதி’ மூலம் முதலாவதாக அரசுக்கு மாற்றிப் பெற்றுக்கொண்ட பின்னர், 1950 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க காணிக் கையகப்படுத்தல், சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் குறித்த நபர்களுக்கு நட்டஈடு கைவிடல் கூற்றைப் பெற்றுக்கொண்டு அரச உரித்தைப் பதிவு செய்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
மீளக்குடிமர்த்துவதற்கு தங்களிடம் பொருத்தமான காணிகள் இல்லாதவர்களுக்கு மேற்குறிப்பிட்ட முறைகளின் பிரகாரம் காணிகளை வழற்குவதற்கு வாய்ப்புக்கள் இல்லாதபோது, உயர்ந்தபட்சம் 10 பேர்ச்சர்ஸ்கள், அரச காணியிலோ அல்லது அரசுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியிலோ காணித்துண்டொன்றை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர், 1947 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க அரச காணிக் கட்டளைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழ் காணி உரிமையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகிய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.
