தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய, 5 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுருத்தலுக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சம்பத் குமார விசேட பணியகத்திலிருந்து கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும், தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் சப்பிரகமுவ மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர, அப்பதவிக்கு மேலதிகமாக பயிற்சி மற்றும் உயர் பயிற்சிப் பிரிவுக்கு பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். விசேட பாதுகாப்புப் பதவியிலிருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி. கருணாநாயக்க அப்பதவியிலிருந்து வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, வட மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய புத்திக சிறிவர்தன தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், 6 உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர்களுக்கும் இடமாற்றங்களை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, காலி மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் நாமல் பெரேரா அப்பதவியிலிருந்து பொலிஸ் களப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இடமாற்றங்கள் சேவைத் தேவைக் கருதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
