நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கல்லெல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், அப்பகுதியில் வசித்துவந்த 12 குடும்பங்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கடந்த 2025ஆம் ஆண்டு முதன்முறையாக மண்சரிவு அடையாளங்கள் கண்டறியப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர்கள் நடத்திய கள ஆய்வின் பின்னர், இப்பகுதி “மண்சரிவு ஏற்படும் அதிக அவதானமிக்க பகுதி”யாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையிலேயே, நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை 6:30 மணியளவில் இந்த பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்படத் தொடங்கியுள்ளது.
இதனையடுத்து, அனர்த்த அபாயம் இருந்த பகுதிகளில் வசித்த குடும்பங்கள் தற்காலிகமாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
