செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மடிக்கணினிகள் (Laptops) மற்றும் கணினிகளில் (Desktops) நேரடியாகச் செயற்படுத்தக்கூடிய புதிய சிப் ஒன்றை என்விடியா (Nvidia) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தாய்வானில் நடைபெறும் ‘Computex’ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜென்சன் ஹுவாங், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மூன்று வருட கூட்டு முயற்சியில் இந்த ‘RTX Spark’ சிப் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது AI யுகத்திற்கான கணினிகளை மறுவடிவமைப்பு செய்யும் நோக்கம் கொண்டது.
தாய்வானில் ‘MediaTek’ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ப்ரொசெசர் கிளவுட் கம்ப்யூட்டிங்கை (Cloud Computing) மட்டும் நம்பியிருக்காமல், கணினியிலேயே நேரடியாக சுயமாக இயங்கும் AI முகவர்களை (Autonomous AI Agents) இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிப் பொருத்தப்பட்ட மடிக்கணினிகள் மற்றும் கணினிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் Dell, HP, Lenovo, ASUS, மைக்ரோசாப்ட் சர்பேஸ் மற்றும் எம்எஸ்ஐ (MSI) ஆகிய நிறுவனங்கள் ஊடாக சந்தைக்கு வரவுள்ளன.
AI தொழில்நுட்பமானது வெறுமனே கேள்விகளுக்குப் பதிலளிக்கும் ஒரு கருவியாக இல்லாமல், முழுமையாக சுயமாக இயங்கும் முகவர்களாக மாறும் ஒரு திருப்புமுனையாக இந்த தொழில்நுட்பம் அமையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்!
